பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகே மழையை மட்டுமே நம்பி பயிரிடும் மானாவரி விவசாய பணிகள் துவங்கியுள்ளது. பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், அய்யம்பட்டி, ரெங்கராஜபுரம் மற்றும் தாண்டிக்குடி மலை அடிவாரப்பகுதிகள் உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்தது. தொடர் மழையால் மானாவரி விவசாய நிலங்களில் விதைப்பதற்கு ஏற்ற ஈரப்பதம் உள்ளதால், மானாவரி விவசாய பணிகளுக்காக மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் தற்போது தங்களது நிலங்களில் மானாவாரி விவசாய பணிகளை துவக்கியுள்ளனர்.
கடந்த ஆடி மாதம் மழை பெய்யாத காரணத்தினால், ஆடியில் துவங்க வேண்டிய விதைப்புப் பணிகள் தாமதமாக ஆவணி மாதத்தில் துவங்கியுள்ளது. தற்போது நிலங்களில் டிராக்டர் மற்றும் மாட்டு உழவின் மூலம் நிலக்கடலை, தட்டாம்பயிறு, மொச்சை, சோளம், பருத்தி, கம்பு ஆகிய மானாவரி பயிர்களை விவசாயிகள் நடவு செய்து வருகிறார்கள். தற்போது இந்த பகுதிகளில் விவசாய பணிகள் துவங்கியுள்ளதால், விவசாய பணிகளை நம்பி வாழ்ந்து வரும் விவசாய கூலித் தொழிலாளர்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: விதைத்தல், பார் போடுதல், உரம், கூலி என ஏக்கருக்கு ரூ.25 முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து மானாவாரி பயிர் ரகங்களை விதைத்து வருகிறோம். விதைப்புக்கு பின்பு பயிர்கள் வளரும் சமயத்தில் முறையாக மழை பெய்தால் 90 நாட்களில் மானவரி பயிர்கள் அறுவடைக்கு தாயாராகி விடும். நிலக்கடலை விதைப்பதற்கு மாட்டு உழவையும் மற்ற சோளம், கம்பு போன்ற பயிர்ளை விதைப்பதற்கு டிராக்டர்களைக் கொண்டு உழவு பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
ஆத்தூர் உதவி வேளாண்மை அலுவலர் உமா கூறியதாவது: மானாவாரி விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருள்களான உயிர்உரம்,நுண்ணுட்ட உரங்கள், விதைகள் போன்றவற்றை விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையை மட்டும் கொண்டுவந்து காண்பித்து, மானிய விலையில் ஆத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.